பசுமை நினைவுகள்
வாழ்க்கைப் புத்தகத்தில்
பசுமையான பக்கங்களாய்
அழியாத சுவடுகளாய்
என் பள்ளி நினைவுகள்.....
வெள்ளைச் செட்டைக்குள்
பட்டாம் பூச்சிகளாய்
சிறகடித்த காலங்கள்
நினைக்கும் பொழுதினில்
சுகமான தென்றலாய்
மனதை வருடிச்செல்லும்.....
கைகளில் அடங்காத
புத்தகச் சுமைகள்....
சோதனை என்றவுடன்
வேதனையை வரவழைத்து
விழித்திருந்த இரவுகள்....
கண்கள் சொருகும்போதும்
கொட்ட முழித்து
கொட்டாவி விட்ட நினைவுகள் ....
பரீட்சை முடிந்தவுடன்
நித்திரை மகள்
நிச்சயமாய் வராளா
என்றெண்ணி ஏங்கி
காத்திருந்த இரவுகள்.....
நட்பென்ற கூட்டுக்குள்
பாசச்சிறகுகள் விரித்து
நனைந்திருந்த குஞ்சுகளாய்
நினைவிழந்த நாட்கள்....
கண்ணைக்கட்டி கோபம் போட்டு
மௌனமாயிருந்தபோதும்
கடைக்கண்ணால் தோழியை
பார்த்திருந்த ஞாபகங்கள்....
இன்னும் எத்தனையோ
இதய அறைகளை
முட்ட நிரப்பிய நினைவுகளாய்
என் பள்ளிக்காலத்து
பசுமை நினைவுகள்......